உங்களின் ஊர் உங்களை அன்புடன் வரவேற்க காத்திருக்கிறது! - பேரன்புடன் மெய்யழகன்!
நீண்ட இடைவெளி! '96 - இன்றும் பலருக்கு நெருக்கமான படைப்பு. ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் தேர்ந்த பாத்திரங்களாக இல்லாமல் நமது வாழ்வோடு ஒன்றி இருப்பார்கள். "நரை வந்த பிறகே, புரியுது உலகை" என பிரதீப் குமாரின் குரல் இன்றும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி பல பரிமாணங்களில் வாழ்வியலைப் புரட்டிப் போட்ட படைப்பாளரைக் காணவில்லை. மீண்டும் வருகிறார் பிரேம்குமார். சென்ற முறை - காதல். இந்த முறை - அன்பு. அதுவும் பேரன்பு. அழகிய தமிழ்ப்பெயர் இதனுடன் சேர்ந்து கொள்கிறது. மெய்யழகன்!! கதை மாந்தர்களாக கார்த்தியும், அரவிந்த் சுவாமியும். வித்தியாசமான இந்த இணைப்பு கவனம் பெறுகிறது. ஆரம்பம் முதலே தமிழுணர்வினை நெடுகிலும் நிறைத்து வைத்திருக்கிறார் பிரேம். கிளர்வோட்டம் வருகின்றது, புரட்டாசியில் வெளியீடு என்கின்ற அழைப்பிதழுடன். இதுவே ஆகச் சிறந்த பேரன்பும், பெருமிதமும். சொந்த ஊரைப் பிரிந்து சென்ற ஒருவன், மீண்டும் தனது சொந்த ஊருக்கு ஓர் கல்யாணத்திற்காக விருப்பமில்லாமல் அரை மனதுடன் வருகிறான். வந்த இடத்தில் அவனுடன் யார் என்றே அடையாளம் தெரியாத ஒருவன் உபசரிப்பில் "அத்தான்" என அன்பு மழை பொழ...